Monday 30 April 2012

காலமாற்றங்களும் இசைவட்டுக்களும் நானும்


நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு போகும் முன்பு எப்பொழுதும் போல் உணவகம் சென்றேன் .உணவருந்தி முடித்துவிட்டு அங்கிருக்கும் வை பை உபயோகபடுத்தி எனது செல்போனில் பாடல்கள் பதிவிறக்கம் செய்தேன் .முப்பத்து எட்டு பாடல்கள் ஒன்றரை மணிநேரத்தில் பதிவிறக்கம் செய்து முடித்தேன் .

காலமாற்றங்கள் மிக விநோதங்கள் கொண்டது .கிராமபோன் எனும் இசைதட்டுக்களில் ஆரம்பித்து இன்று ப்ளுரே குறுந்தகடுகளில் வந்து நிற்கிறது .



எனது சிறுவயது பாடல்கள் கேட்கும் அனுபவங்கள் இலங்கை வானொலியை சேர்ந்தே இருந்தது .அந்த வானொலி அறிவிப்பாளர்கள் பாடல் ஒளிபரப்பும் முன்பு பேசுவது அந்த தமிழ் உச்சரிப்பு இன்று கேட்க முடிவதில்லை .





எங்கள் வீட்டு ரேடியோ மிக பெரியதாக இருக்கும் .எங்கள் ரேடியோ போலவோ நான்கைந்து ரேடியோக்கள் எங்கள் கிராமத்து வீடுகளில் இருந்தது .அவை எல்லாம் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை .


வருடத்தில் கிராமங்களுக்கு இரண்டொதொரு தடவை அதிகாரிகள் வீடு தேடி வரும்பொழுது எல்லா வீட்டு ரேடியோக்களும் துணிகள் சுற்றப்பட்டு அறைகளில் ஒளித்து வைக்கப்படும் .அன்று ரெடியோக்களுக்கு லைசென்ஸ் எடுக்கவேண்டும் .அந்த ரேடியோவில் தான் குரு,திரிசூலம் போன்ற திரைப்படங்களின் ஒலிசித்திரங்கள் ஞாயிறுகளில் கேட்பது .வீட்டில் உள்ள பெண்கள் விவித பாரதியில் இரவு ஏலே முக்கால் மணிக்கு ஒலிபரப்பாகும் நாடகங்கள் கேட்பர் 




.

ரேடியோக்களுக்கு பிறகு கல்யாணவிடுகளில்,காது குத்து விழாக்களில் பெரிய இசை தட்டுக்களில் கேட்ட பாடல்கள் .எல்லா கல்யாண வீடுகளிலும் வாராயோ தோழி வாராயோ இல்லாமல் பாடல்கள் கிடையாது .பாடல் குழாய்களில் ஒலிக்கும்போது கிராமபோன் அருகே ஆள் கண்டிப்பாக அமர்ந்து இருக்கும் .சரியான வேகத்தில் சுழலா விட்டால் பாடல் வாய்க்குள் கூழாங்கற்கள் போட்டு பாடுவது போல் இருக்கும் ,அதனால மைக்செட் ஓட்டுபவர் பக்கத்திலேயே இருப்பார் .நான் அவர்களோடு அமர்ந்து அந்த பெரிய தட்டுக்களின் அட்டை படத்தில் இருக்கும் படத்தையும் பாடல் பாடியவர்கள் பெயரையும் படித்துக்கொண்டு இருப்பேன்.



இதன் பிறகுதான் கேசட் பிளேயர் வந்தது .கேசட்டுக்களில் பிடித்த பாடல் பதிந்து கேட்பது ஒரு சுகம் .ஆனால் எங்கு நல்ல பாடல்கள் கிடைக்கும் ,எங்கே நன்றாக பாடல் பதிந்து கொடுப்பார்கள் என்று தேடியலைந்து பாடல்கள் பதிந்தது இன்று நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது .நான் பாடல்கள் பதிந்தது பெரும்பாலும் அறந்தாங்கி தாலுகா ஆபிஸ் ரோட்டில் இயங்கிய பொன்னி மியூசிக்கல் கடையில் தான் .இங்கு பதிந்த கேசட்டுக்கள் நன்றாக இருக்கும் கேட்க .ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று மியூசிக்கல் கடைகள் இருக்கும் .பெரும்பாலும் கடைகள் பெயர் இளையராஜா பெயர்களில் ஆரம்பித்து இருக்கும் .நிறைய கடைகள் பெயர் ராகதேவன் மியுசிக்கல்ஸ் .




 யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் DTK,SONY 60,90,120 என்ற அளவுகளில் கேசட் வாங்கி வருவார்கள் .இன்று இந்த கேசட்டுக்கள் இருக்கா என்பது தெரியவில்லை .சில நேரங்களில் ஒன் டச் கேசட் வாங்கி பதிவோம் .இந்த ஒன் டச் கேசட் பாடல் பதிந்து வெளிவந்த கேசட்டுக்கள் .

ஒரு கேசட் பதிவதற்கு பாடல் தேர்வு செய்ய ஒருவாரம் ஆகிவிடும் .நண்பர்களிடம் என்ன பாடல் நல்லா இருக்கும் என கேட்டு அம்பது பாடல் தேர்வு செய்து அதிலும் பின்பு பாடல்கள் கழித்து ஒருவழியாக கேசட் கடைக்கு சென்றால் நாம் தேர்வு செய்து வைத்து இருக்கும் பாடல்களில் சில பாடல்கள் அவரிடம் இருக்காது .மறுபடியும் பழைய லிஸ்ட்ல இருந்து சில பாடல்கள் தேர்வு செய்து கொடுத்தால் அவர் வாங்கி கொண்டு இரண்டு வாரம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என தேதி கொடுப்பார் ,இவ்வாறு ஒரு கேசட் பதிந்து அதை கேட்க ஒரு மாதம் ஆகிவிடும் .அந்த கேசட் வீட்டுக்கு வந்ததில் இருந்து ஒரு வாரம் வரைக்கும் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டு இருக்கும் .



இதன் பின்பு என் சித்தப்பா கென்வூட் காம்பாக்ட் சீடி பிளேயர் கொண்டு வந்தார் .அதில் முதன் முதலில் பாடல் கேட்க்கும்போது பாடல்களின் இசை பிரிந்து தனியாக ஒலிக்கும்போது மிக வித்தியாசமாக இருந்தது ,நான் பள்ளிக்கூடம் விட்டவுடன் போவது சித்தப்பா வீட்டுக்கு பாடல் கேட்ப்பதற்கு .

இன்றோ ஒரு இணைய இணைப்பு உள்ள செல்போன் இருந்தால் போதும் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய பாடலை இலவசமாக பதிவிறக்கம் செய்து கேட்கலாம் ,ஆனால் பாடல் தேடியலைந்து பதிந்து கேட்ட சுகம் இதில் இல்லை

1 comment: